புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.
அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.
அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் அவை சூன் 5ம் நாளன்று உலக சுற்றுச் சூழல் நாளை அனுசரித்து வருகிறது.
1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி புவி நாளன்று 141 நாடுகளில் 20 கோடி மக்களைத் திரட்டிச் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உலகம் முழுவதும் அறியச்செய்ததன் மூலம், மறுசுழற்சி முயற்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய உந்துதல் சக்தி கிடைத்தது. அத்துடன் 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜனேரோவில் ஐக்கிய நாடுகள் சபை புவி குறித்து விவாதிப்பதற்கான உயர்மட்ட சந்திப்பிற்கு வழி கோலியது.
2000 ஆம் ஆண்டு நெருங்கும் தறுவாயில், புவி வெப்பமடைதல் மற்றும் சுத்தமான எரிசக்தியை மையப்படுத்திய மற்றுமொரு செயல் திட்டத்தைத் தலைமை ஏற்று நடத்த ஹேய்ஸ் ஒப்புக் கொண்டார். 2000 ஆம் ஆண்டின் ஏப்ரல் 22 புவி நாளானது 1990 ஆம் ஆண்டு புவி நாளில் பொது மக்களின் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையை நினைவுபடுத்துவதாக இருந்தது. 2000 ஆம் ஆண்டு புவி நாளுக்கான, போராட்டக்காரர்களை இணைக்க இணையம் உதவியாக அமைந்தது. அத்துடன் வரலாற்றுச் சாதனையாக 184 நாடுகளின் கோடிக்கணக்கான மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் 5000 சுற்றுச்சூழல் குழுக்கள் கூடி விட்டனர். ஒரு பேசும் முரசு ஆப்பிரிக்காவின் காபோன் இல் கிராமம் கிராமமாகச் சென்றதுடன், லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியின் தேசிய வணிக மையத்தில் கூடினர்.
2007 ஆம் ஆண்டு புவி நாளன்று, உக்ரைனின் கீவ், வெனிசுவேலாவின் கேரகாஸ், துவாலு, பிலிப்பைன்சின் மணிலா, டோகோ, எசுப்பானியாவின் மாட்ரிட், லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற ஆயிரக்கணக்கான இடங்களில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் இதுகுறித்த நடவடிக்கைகளில் பங்கேற்ற ஒன்றிணைந்தனர். இன்றளவில் நடத்தப்பட்ட புவி நாட்களுள் இதுவே மிகப் பெரியது எனலாம்.
புவி நாள் வானவியல் விநோதங்களை ஒரு புதிய வழியில் நோக்குகிறது - அது ஒரு மிகப் பழைமையான வழியும் கூட. வசந்த கால சம இரவு நாள் கதிரவன் நிலக் கோளத்தின் நடுக்கோட்டைக் கடக்கும் நேரம் மற்றும் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு பகல் நேரங்கள் சமமாக இருக்கும் தருணத்தைச் சிறப்பிக்கிறது. ஆண்டு நாள்காட்டியில் இந்நாள் தனிப்பட்ட, பிளவுபடுத்தும் ஒரு குறியீடாகவும் இருப்பதில்லை. ஒரு வாழ்க்கைமுறை மற்றொரு வாழ்க்கைமுறைக்கு மேலானது எனும் கருத்தும் அங்குத் தோன்றுவதில்லை. மார்ச் சம இரவு நாளைச் சிறப்பிப்பதில் உலக மக்கள் அனைவரும் பொதுவான வானவியல் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். அத்துடன் விண் வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால் கிடைக்கக்கூடிய தோற்றத்தின் அடிப்படையில் புவி நாளைக் குறித்த ஒரு கொடி உருவாக்கப்பட்டுள்ளதும் மிகப் பொருத்தமே."
பத்தாண்டுகள் முதல் பல மில்லியன் வருடங்கள் வரை உண்டான கால கட்டங்களில் வானிலை மாறுவதன் பேரிலான புள்ளியியல் பரம்பலே காலநிலை மாற்றம் அல்லது தட்பவெப்ப நிலை மாறுதல் (climate change) என்பதாகும். அது, சராசரி பருவ நிலையில் ஏற்படும் மாறுதலாகவோ அல்லது ஒரு சராசாரி பருவ நிலையைச் சுற்றிலும் உள்ளதான நிகழ்வுகளின் பரம்பலின் மாற்றமாகவோ இருக்கலாம் (எடுத்துக் காட்டாக, மிகவும் அதிகமான அல்லது மிகவும் குறைவான தீவிர பருவ நிலை மாற்றங்கள்). தட்பவெப்ப நிலை மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்தோ அல்லது புவி முழுமையிலும் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இது மீண்டும் மீண்டும் நிகழ்வதான, பெரும்பாலும் சுழற்சியான, எல் நினொ-தெற்கு அலைவு போன்ற தட்பவெப்ப உருமாதிரிகளாக இருக்கலாம்; அல்லது புழுதிப் புயல் போன்று குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒற்றை நிகழ்வுகளாக வரலாம்
அண்மைக் காலத்திய பயன்பாட்டில், குறிப்பாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கை என்னும் பொருளில், தட்பவெப்ப நிலை மாற்றம் என்பது வழக்கமாகத் தற்காலத்திய தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களையே குறிக்கிறது. இது மனித நடவடிக்கைகள் காரணமாக உருவாகும் தட்பவெப்ப நிலை மாற்றம் என்று குறிக்கப்படலாம்; மேலும் பொதுவாகச் சொல்வதானால், புவி சூடாதல் அல்லது "மனித நடவடிக்கைகள் காரணமாக உருவாகும் புவி சூடாதல்" எனப்படுகிறது.
தட்பவெப்ப நிலை அமைப்பின் சில பகுதிகள், அதாவது கடல்கள் மற்றும் பனிக்குல்லாய்கள் போன்றவை, அவற்றின் மிகு அளவு காரணமாக, தட்பவெப்ப நிலைமீதான அழுத்தத்திற்கு தமது பதிலிறுப்பைத் தாமதமாக அளிக்கின்றன. ஆகவே, தட்ப வெப்ப முறைமை புதியதான மற்றும் வெளியிருந்து வருவதான அழுத்தங்களினால் மாற்றம் அடைவது என்பதானது பல நூற்றாண்டுகளோ அல்லது அதற்கும் மேலான கால கட்டத்தையோ எடுத்துக் கொள்ளலாம்.
கண்டங்கள் அமைந்திருக்கும் நிலைதான் கடல்களின் ஜியோமிதியைத் தீர்மானிக்கிறது; ஆகவே, இது கடல் நீரோட்டங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. உலகெங்கும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைக் கடத்துவதில், கடல்கள் அமைந்திருக்கும் பகுதிகள் மிகவும் முக்கியமானவை; எனவே, உலகெங்கும் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிப்பதிலும் இது முக்கியக் காரணியாகிறது. புவியோட்டுத் தகடுகள் எவ்வாறு கடல் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்பதற்கு அண்மையில் அறியப்பட்ட ஒரு எடுத்துக் காட்டு பனாமா கால்வாய். சுமார் 5 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அமைந்த இது அட்லாண்டிக் மற்றும் பசிஃபிக் கடல்கள் நேரடியாகக் கலப்பதைத் தடை செய்தது. இது, தற்போது வளைகுடா ஓடை என்று அறியப்படும் பகுதியின் கடல் இயக்கமுறைமையை வெகுவாகப் பாதிக்கலானது; மேலும், இதன் காரணமாகவே வடகோளத்தின் பனிப்படலம் உருவாகியிருக்கலாம். இதற்கு முன்பான நிலக்கரி உருவாக்கக் காலகட்டத்தில், புவியோட்டுத் தகடுகள், அதிக அளவில் கரியமிலம் சேமிககப்படுவதற்கும், பனியாறுகள் பெருகுவதற்கும் வழி வகுத்திருக்கலாம்.
ஒன்றிற்கு மேற்பட்ட கண்டங்களை உள்ளடக்கியிருந்த பேங்கியா என்னும் மிகப்பெரும் கண்டம் இருந்த காலத்தில் "மிகப்பெரும் பருவ நிலை" சுற்றோட்டங்கள் இருந்ததாகப் புவியியல் ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும், தட்பவெப்ப நிலையை அறியச் செய்யப்படும் மாதிரிகள், பருவக் காற்றுகளின் நிலை பெறவும் ஏதுவாக இருந்ததாகக் காட்டுகின்றன.
பகுதி சார்ந்த வகையில், நில அமைப்பானது தட்பவெப்ப நிலையின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடும். (புவியோட்டுத் தகடுகளின் காரணமான மலையுருவாக்கத்தினால் விளைந்த) மலைகளின் இருப்பானது, மலைகள் ஈரப்பதம் மிக்க காற்றை மேற்செலுத்தி அவை குளிர்ந்து விரைவில் பனிவீழ்ச்சியாகும் ஆரோகிராஃபிக் ப்ரிசிபிடேஷன் என்று கூறப்படும் செயல்பாட்டினை உருவாக்கலாம். பொதுவாக, உயரங்கள் அதிகரிப்பதுடன் தொடர்பு கொண்டு, ஈரப்பதமானது குறைகிறது மற்றும் ஒரு நாளின் வெப்ப நிலை என்பதானது பொதுவாக அலைவு கொண்டு அமைகிறது. சராசரி வெப்பநிலை, பருவ வளர்ச்சியின் நீளம் ஆகியவையும் உயரம் அதிகரிப்பதுடன் எதிர்மறைத் தொடர்புற்றுக் குறைகின்றன. மலைகளின் விளைவான பனிவீழ்ச்சியும் இத்துடன் இணந்து, குறைந்த-உயர ஆல்பைன் பனியாறுகளின் இருப்பு மற்றும் மலைகளின் உயிரியன அமைப்பு ஆகியவற்றைச் சார்ந்து பல்வேறு உயரங்களில் தாவர வளமும், விலங்குகளும் உருவாவதற்கு மிகவும் முக்கியக் காரணியாகிறது.
கண்டங்களின் அளவும் மிக முக்கியமானதாகும். கடலானது வெப்ப நிலையை நிலைப்படுத்தும் விளைவைக் கொண்டுள்ளதால், கடலோரப் பகுதிகளின் வருடாந்திர சராசரி வெப்ப நிலையானது, நாட்டின் உட்பகுதிகளை விடப் பொதுவாகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இதனால், சிறு கண்டங்கள் மற்றும்/ அல்லது தீவு வளைவுகள் ஆகியவற்றை விட ஒரு பெரும் கண்டமானது பருவம் சார்ந்த தட்பவெப்ப நிலையைக் கொண்ட நிலப் பகுதியை அதிக அளவில் கொண்டிருக்கும்.
தட்ப வெப்ப நிலையைப் பாதிக்கும் அளவு மிகப் பெரிய அளவுகளில் எரிமலை வெடிப்புகளாவன, சராசரியாக ஒரு நூற்றாண்டில் பல முறைகள் உண்டாகின்றன. இவை (சூரிய ஒளிக் கதிர் சுற்றெரிவு புவியை அடைவதை ஒரளவு தடையிடுவதால்) சில வருடங்களுக்குக் குளிர்வையும் உருவாக்குகின்றன. 20வது நூற்றாண்டில்[20] (1912வது வருடத்திய நோவாருப்டா எரிமலை வெடிப்பிற்குப் பிறகு) இரண்டாவது எரிமலை வெடிப்பான, 1991வது வருடத்திய பினாடுபோ மலை எரிமலை வெடிப்பு தட்பவெப்ப நிலையை மிகுந்த அளவில் பாதித்தது. உலக அளவில் வெப்ப நிலை சுமார் 0.5"சி (0.9"எஃப்) என்ற அளவில் சரிந்தது. 1815வது வருடம் தம்போரா மலையின் எரிமலை வெடிப்பு வேனிற்காலம் இல்லாத ஒரு வருடம் உருவாவதில் விளைந்தது. பெரும் தீப்பரப்புகள் என்று பொதுவாக அறியப்படும் மிகப் பெரும் எரிமலை வெடிப்புகள் ஒவ்வொரு நூறு மில்லியன் வருடங்களிலும் சில முறைகளே நிகழ்கின்றன; ஆயினும், இவை புவி வெப்பமயமாதல் மற்றும் ஒட்டு மொத்த இன அழிவு ஆகியவற்றை விளைவிக்கக்கூடும்.
எரிமலைகள் என்பவை நீட்டிக்கப்பட்ட கரியமில சுழற்சிகளின் பகுதிகளுமாகும். மிக நீண்ட காலத்திற்கான (நிலவியல்) கால கட்டங்களில், இவை புவியின் மேல் அடுக்கு மற்றும் கீழடுக்கு ஆகியவற்றிலிருந்து கரியமில வாயுவை வெளியிடுகின்றன. இதனால், வண்டல் மலைகள் மற்றும் இதர நிலவியல் கரியமில வாயு மூழ்கடிப்பான்களுடன் இவை இடைபடுகின்றன. இருப்பினும், யுஎஸ் நிலவியல் சுற்றாய்வு, எரிமலைகள் வெளிப்படுத்துவதை விட மனித நடவடிக்கைகளே, 130 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துவதாகக் கணித்துள்ளது.
20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமடைதல் எனப்படுகிறது. சென்ற நூண்றான்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 °C (1.33 ± 0.32 °F) கூடியிருக்கிறது.[1][A] இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) முடிவு செய்துள்ளது. கைத்தொழிற் புரட்சிக்கு முன்னர் தொடக்கம் 1950 வரை ஞாயிற்றுக் கதிர் வீசல் வேறுபாடுகள் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் புவி சூடாதலுக்கு காரணமாயிருந்திருக்கலாம் என்றும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு முடிவு செய்துள்ளது. எனினும் இந்நிகழ்வுகள் முடிந்த பின்னர் சிறிய அளவில் புவி குளிமையாதலும் நடைபெற்றுள்ளது. இந்த அடிப்படையான முடிவுகள், ஜி8 நாடுகளில் அறிவியல் கழகங்கள் உட்பட[4] 70க்கும் கூடுதலான அறிவியல் சமூகங்களாலும் அறிவியல் கழகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒரு சிறு எண்ணிகையிலான அறிவியலாளர்கள் இந்த முடிவுகளுடன் உடன்படவில்லை.
தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாதிரிகளின் எதிர்காலா மதிப்பீடுகள் இருபத்தொறாம் நூற்றாண்டில் புவி மேற்பரப்பு வெப்பநிலை மேலும் 1.1 தொடக்கம் 6.4 °C வரை (2.0 - 11.5 °F) கூடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. ஒவ்வொரு தட்பவெப்பநிலை மாதிரியும் வெவ்வேறான அளவு வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் வெப்பநிலை கூட்டும் திறனையும் எதிகால உற்பத்தி அளவுகளையும் பயன்படுத்துவதால் தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. புவி சூடாதல் புவியின் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இருக்காது என்பது உட்பட பல நிச்சயமற்ற தன்மைகளும் இந்த தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகளில் காணப்படுகிறன. கூடுதலான ஆய்வுகள் 2100 ஆம் ஆண்டு வரை கருதியே செய்யப்பட்டுள்ளன எனினும், வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வு முற்றாக நிறுத்தப்பட்டாலும் பெருங்கடல்களின் பாரிய வெப்பக்கொள்ளளவு, வளிமண்டலத்தில் கரியமில வளிமத்தின் நீண்ட ஆயுட்காலம் என்பவற்றைக் கருதும் போது 2100 ஆம் ஆண்ட்டுக்கு அப்பாலும் புவி சூடாதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடிவரும் புவி வெப்பநிலை கடல் மட்டத்தை உயரச் செய்து வீழ்படிவு கோலத்தை மாற்றிவிடும், மேலதிகமாக இதில் மிதவெப்ப மண்டல பாலைவனப் பகுதிகள் விரிவடைவதும் அடங்கலாம்.[8] பனியாறுகள், நிலை உறை மண், கடல்ப் பனி என்பவை துருவங்களை நோக்கிப் தொடந்ந்து பின்வாங்கும் என் எதிர்வுக்க்கூறப்படுகிறது. சூடாதல் விளைவு ஆர்க்டிக் பகுதியில் கூடுதலாக காணப்படும். சீரற்ற தட்பவெப்பநிலை நிகழ்வுகளின் கடுமை கூடுதல், உயிரின அழிவு வேகம் கூடுதல், வேளாண்மை விளைச்சளின் மாற்றங்கள் என்பவை எதிர்பார்க்கப்படும் சில விளைவுகளாகும்.
புவி சூடாதலினைக் குறித்தும் அதைத் தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் (சிலர் ஒன்றும் தேவையில்லை எனவும் கருதுகின்றனர்) கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. புவி சூடாதல் விளைவுகளை தடுப்பதற்கு இப்போதைக்குள்ள முறைகளாக வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைத்தல், சூடாதல் காரணமாக ஏற்படும் விளைவுகளிற்கு ஏற்வாறு மாறிக்கொள்ளல் என்பன முக்கியமானவையாகும். வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைக்கும் நோக்குடைய கியோத்தோ நெறிமுறையில் பல நாடுகள் கைச்சாத்திட்டு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.
நாசாவின் கோடார்டு விண்வெளி ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, 1800 ஆண்டுகளின் பிற்பகுதியில் வெப்பநிலை தொடர்பான நம்பகமான பரவலான கருவியியல் அளவீடுகள் கிடைக்கப் பெற்றதில் இருந்து 2005 ஆம் ஆண்டே வெப்பநிலைக் கூடிய ஆண்டாகும். இவ்வெப்பநிலை வெப்பநிலைத் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தைப்பிடித்த 1998 ஆம் ஆண்டினதை விட சில கீழ்நூறு பாகைகள் கூடுதலாகும்.[10] உலக வானிலையியல் அமைப்பும் தட்பவெப்பநிலை ஆராய்ச்சிப் பிரிவும் மேற்கொண்ட மதிப்பீடுகளின் படி 1998 ஆம் ஆண்டு முதலிடத்தையும் 2005 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்திருக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வலிமையான எல் நீனோ 1998 ஆம் ஆண்டில் நடைப்பெற்றமையால் அவ்வாண்டின் வெப்பநிலைகள் சராசரி அளவைவிட கூடுதலாக காணப்பட்டன.
வெப்பநிலை மாற்றம் உலகுமுழுவது ஒரே அளவில் நடைப்பெறவில்லை. 1979 ஆம்ஆண்டு முதல் நிலத்தின் வெப்பநிலை கடல் வெப்பநிலையைவிட இரண்டு மடங்கு வேகமாக கூடியுள்ளது (பத்து ஆண்டுகளுக்கு 0.25 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C என்பதை ஒப்பிடுக). நிலத்தைவிட கடல் கூடுதல் வெப்பக் கொள்ளளவைக் கொண்டுள்ளமையும் கடல் ஆவியாதல் மூலம் நிலப்பரப்பை விடவும் வெகு துரிதமாக வெப்பத்தை இழக்கக் கூடியமையும் என்ற இரண்டு கரணியங்களால் கடல் வெப்பநிலைகள் நிலப்பரப்பினதை விடவும் மெதுவாகவே கூடுகின்றன வடக்கு அரைக்கோளம் தெற்கு அரைக்கோளத்தை விட கூடுதல் நிலப்பரப்பை கொண்டிருப்பதாலும் பனி-வெண் எகிர்சிதறல் பின்னூட்டச் சக்கரத்துக்குள்ளாகும் கூடுதலான பருவ-தூவிப்பனியுள்ளநிலப் பகுதிகளும் கடல் பனியும் காணப்படுவதாலும் வடவரைக்கோளம் துரிதமாக வெப்பமடைகிறது. வெப்பம்சிக்குறுத்தும் வளிமங்கள் கூடுதலாக வடவரைக்கோளத்தில் கூடுதலாக உமிழப்பட்டாலும் அவ்வளிமங்கள் இரண்டு அரைக்கோளங்களின் வளிமங்கள் கலக்க எடுக்கும் நேரத்தை விட கூடிய நேரம் வளிமண்டலத்தில் இருப்பதால் வெப்பமடைதலில் எந்த வித்தியாசத்திற்கும் காரணமாவதில்லை.
பெருங்கடல்களின் கூடுதலான வெப்பக்கொள்ளளவுக் காரணமாகவும் ஏனைய நேரில் விளைவுகளின் மெதுவான தாக்கம் காரணமாகவும் தட்பவெப்பநிலை சீராக பலநூற்றாண்டுகள் ஆகலாம். ஆய்வுகளின் படி வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களிம் உமிழ்வு 2000 ஆம் ஆண்டு அள்வுகளில் கட்டுப்படுத்தப்பட்டாலும் வெப்பநிலை 0.5 °C (0.9 °F) யினால் மேலும் கூடலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
புவி சூடாதலின் விளைவுகள் மனித வாழ்விற்கும் சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு (IPCC) தங்களது கடைசி அறிக்கையில் குறிப்பிட்டததை விட வேகமாக புவி சூடாதல் நிகழுமென எதிவுகூறியுள்ளது.
புவியின் மேற்பரப்பானது வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதையே புவி சூடாதல் என்று கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை இன்று உலக நாடுகளினது கவனத்தை ஈர்த்துள்ளது. 1850 இன் பின்னர் புவியின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை 10 பாகை செல்சியஸ் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைடின் செறிவும் 28 வீதமாக அதிகரித்துள்ளது.
சுற்றுப்புற சூழலையும் தட்ப வெட்ப நிலை மாற்றமும், புவி வெப்பமடைதலும் மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. வெப்பநிலையை பதிவுசெய்யும் கருவிகள் கொண்டு தட்பவெட்ப நிலை மாற்றத்தை கணக்கீட்டு பெற்ற முடிவுகளின் படி, கடல் மட்ட அளவு உயருதல்|கடல் மட்டம் உயர்வதற்கும், வடதுருவத்தில் பனியளவு குறைவதற்கும் ஆதாரங்களாக உள்ளது. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் நான்காம் மதிப்பீடு அறிக்கை, "உலகளாவிய சராசரி வெப்பநிலை இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் உயர்வடைந்துள்ளது [பெரும்பாலான இடங்களில்] என்பதற்கு காரணம் மனிதனால் அதிக அளவில் பயன் படுத்தப்படும் பைங்குடில் வளிமங்களால் தான்." என்று தெரிவிக்கிறது. வருங்கால தட்ப வெட்ப நிலை மாற்றங்கள் பூமியை இன்னும் வெப்பமடைய செய்யும்(அதாவது, உலகளாவிய இடைப்பட்ட வெப்பநிலை மேல் போக்கில் சென்று கொண்டிருக்கிறது), கடல் மட்டத்தை உயர செய்யும், தீவிர தட்பவெட்பநிலையை உண்டாக்கும் நிகழ்வுகளை அடிக்கடி ஏற்பட செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தட்ப வெட்ப நிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது சூழல் மண்டலம். மனிதர்கள் வருங்கால தட்ப வெட்ப நிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள சிரமப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடப் வெட்ப மாற்றங்களால் நடை பெறவிருக்கும் அபாயங்களை தடுக்க நிறைய நாடுகள், பைங்குடில் வளிமங்களை குறைக்க சட்டம் கொண்டு ஆதரிக்க பொது கொள்கைகள் கொண்டுள்ளன.
அதிக அளவில் நிலங்கள் வறட்சியை சந்திக்கும். வெப்பமண்டல புயல்கள் அதிக அளவில் உண்டாகும். கடல் மட்டத்தின் அளவும் பல நிகழ்வுகளினால் அதிகரிக்கின்றது. (சுனாமியைபோல் அல்லாத நிகழ்வு.
1. நீர் ஆவியாகுதலில் அதிகரிப்பு
2. தீவிரமான வானிலையினால் உண்டாகும் விளைவுகள்.
3. குறிப்பிட்ட இடத்தின் தட்பவெட்ப நிலை மாற்றங்கள்
4. பனிப்பாறைகள் குறைந்து மறைந்து போகுதல்.
5. வெட்ப நிலை அதிகரித்தல்
6. அமிலப்படுத்துதல்
7. தெர்மோஹாலின் சுற்றோட்டத்தின் நிறுத்தம்
8. உயிரியம் சிதைவு
ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு டென்மார்க்கின் கோபன்ஹேகன்நகரின் பெல்லா மையத்தில் 2009, டிசம்பர் 7 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற்றது. இம்மாநாடு ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் கட்டமைப்பு கூட்டத்தைச் சேர்ந்த 15ஆம் மாநாட்டு அங்கத்தவர்களையும் (COP 15) கியோட்டோ நெறிமுறையின் ஐந்தாம் கூட்ட அங்கத்தவர்களையும் (COP/MOP 5) உள்ளடக்கியது. பாலி வழிநடப்பின்படி, 2012க்குப் பின்னரான பருவநிலை மாற்ற குறைப்பு குறித்த கட்டமைப்பு பற்றி உடன்பாடு காணவேண்டும்.
இந்த மாநாட்டிற்கு முன்னோடியாக மார்ச் 2009இல் அறிவியல் மாநாடுகள் இதே பெல்லா மையத்தில் நிகழ்வுற்றன.
இந்த மாநாட்டின்போது "மிட்டில்பரோ போன்ற நகரம் இதே கால அளவில் வெளியிடும் 41,000 டன் அளவு கரியமில வளியினை வெளியிடும்" என எதிர்பார்க்கப்படுகிறது.